Tuesday, July 25, 2017


34 வயது  கறுப்பு ஜூலைக்கு
Bildergebnis für கறுப்பு ஜூலை
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சிறிய தீவு 1958,1977,1981 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைக் கண்டு மனிதவளம், பொருளாதாரவளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது.

ஆனால், இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால்தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது.இதன் அதி உச்சமே இறுதிக்கட்ட யுத்தம் நடந்தேறி இலங்கையில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது.

ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும்,  அடி மனதில்  படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.

ஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுத்த வியாக்கியானம்  "உணர்ச்சி வசப்பட்டு சிங்கள மக்கள் ஆவேசத்தில் செய்த காரியம்' என நியாயப்படுத்தி மேலும்  இக்கால கட்டத்தில் " யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.


அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை' என நியாயப்படுத்தியது கண்டு நாகரிக உலகம் தலைகுனிந்தது.

தென் இலங்கை மற்றும் மலையகமெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள்,  கட்டிடங்கள்  தீ பிழம்புகளில் எரிந்து அழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.  

கால், கை  முறிந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு தாயகத்திற்கு கப்பல்களில் அனுப்பப்பட்டனர் . தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

ஆனாலும் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை தமிழன் பெருமை கருதி இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . எமக்குள்ளே பல பெரும் அழிவுசார் குறை பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இதுதான் நம் தமிழன் . அழித்தனர் இனவாதிகள். ஆம் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை இங்கு பதிவு செய்தாக வேண்டும். 


ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் "தார்மிக அரசு' பதவிக்கு 1977 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் வந்த பின்னர் 1977,1980,1981,1982 இல் வடக்கு, கிழக்கில் அரச படையினரும் மத்திய மலைநாட்டில் சிங்கள வன்முறைக் கும்பலும் தமிழ் மக்கள் மீது வன்முறை வைத்து தாக்குதல் நடத்தி ஒத்திகை பார்த்துவிட்டு 1983 இல் அதனைக் காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றியபோது அகில உலகமும் அதிர்ந்தது. தீதும் நன்றும்  பிறர்தர வாரா :இப்படி ஒரு பேரழிவைச் சந்திக்க ஈழத்தமிழினம் செய்த தவறுதான் என்ன?


தமது வாழ்வில் வளம் சேர்க்க முனைந்தது தவறா? அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா? அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா? அன்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின்படி தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரியது தவறா?


1983 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள 37 நகர, மாநகர சபைகளுக்குத் தேர்தல்களும் 18 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலும் சாவகச்சேரியிலும் ஆளும் கட்சி ஐ.தே.க. வேட்பாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழர் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாதென தமிழ்த் தீவிரவாத இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டனர்.


தேர்தலின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் காவலுக்கு நின்ற ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இவை எல்லாவற்றையும் சிறு, சிறு சம்பவங்களாகவே ஜே.ஆர்.அரசு கணித்தது. இதைவிட சிக்கல்களும் சிரமங்களும் பல மடங்கு அதிகரிக்கப் போகின்றன என்பதை அரசியல் மேதாவி எனக் கருதப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கூட அனுமானிக்க முடியாமலிருந்தது.


1983 ஜூலை 22 ஆம் திகதி கொழும்பில் ஆடிவேல் விழா இரதபவனி. அதைத் தடுத்து நிறுத்துவதா அல்லது வழமைபோல அனுமதிப்பதா என்று தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள் பலத்த யோசனையுடன் மேலதிகாரிகளின் உத்தரவுடன் ஆடிவேல் விழாவை நடத்தவும் இரத பவனிக்கும் அனுமதியளித்தனர். எனினும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தென்னிந்தியப் பாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இசைக் கச்சேரியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் கோயிலின் திறந்த வெளியில் நடத்தத் தடை விதித்தனர்.


அதே தினத்தன்று யாழ்ப்பாண குருநகர் முகாமிலிருந்து இரவு நேர ரோந்துப் பணிக்காக பதினைந்து இராணுவ வீரர்கள் கிளம்பினார்கள். அவர்களது பாதை குருநகர் முகாமிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நாகவிகாரை, நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், கல்வியங்காடு வழியாக மீண்டும் குருநகர் முகாமிற்குத் திரும்புவது.


அன்று பௌர்ணமி தினத்திற்கு முதல் தினம் முழு நிலவு. நல்ல வெளிச்சம். எனவே, 15 படையினரும் அஞ்சாமல் முன்னேறினார்கள். இக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் கப்டன் வாஸ் குணவர்த்தன என்பவர்.


உரும்பிராய் சந்தியைக் கடந்து இரு வாகனங்களில் வந்த இராணுவத்தின் திருநெல்வேலிச் சந்தியில் மின்கம்பம் நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டுக் கிடந்ததை அவதானித்தார்கள். எனவே இரண்டு வாகனங்களும் மெதுவாக நகரத் தொடங்கின. அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தேறியது. இரண்டு வாகனங்களும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதறுண்டன.அதேநேரத்தில் துப்பாக்கி வேட்டுகளும் எல்லாப் பக்கங்களிலுமிருந்து சரமாரியாக வாகனத்தில் வந்தோரைத் தாக்கின. பதின்மூன்று இராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே மரணமானார்கள். அஙு4889 என்ற ஜீப் வண்டியும் 26 ஸ்ரீ 3193 என்ற ட்ரக் வண்டியும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதலமாகியது. உயிர் தப்பியோர் இருவர் மட்டுமே!


அந்த இருவரில் இரண்டு கால்களிலும் குண்டடிபட்ட ஆர்.ஏ.யு.பெரேரா என்பவர் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை சிரமப்பட்டுக் கடந்து கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு வந்து குருநகர் முகாமிற்கு தகவல் தந்தபோது நேரம் இரவு ஒரு மணி. பின்னர் பெரேராவிற்கு பதவி உயர்வு கிடைத்தது என்பது பிறிதொரு விடயம். இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய மற்றொருவர் ஐ.எச்.சுமதிபால என்பவர் ஆவார்.



அப்போதைய குருநகர் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் பிரிகேடியர் பல்த்சார், இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் சேபால ஆட்டிகல, படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.படுகொலைகள் பதின்மூன்று நடைபெற்ற அடுத்தநாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமை போயா தினம்.


படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதிக்கு சேபால ஆட்டிகல அதிகாலை கூறிய அதிர்ச்சி செய்தி படுகொலைகள் பதின்மூன்று பற்றியதுதான். அதிர்ச்சியடைந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஜே.ஆர். சாணக்கியவாதியல்லவா? உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்து 13 இடங்களில் இறுதிக் கிரியைகள் நடந்தால் 13 இடங்களில் கலவரம் ஏற்படலாம். எனவே, யாழ்ப்பாணத்திலேயே புதைத்துவிடும்படி திஸ்ஸ வீரதுங்கவிடம் சொல்லுங்கள் என ஆட்டிகலவைப் பணித்தார்.

ஜெனரல் சேபால ஆட்டிகல இச்செய்தியை இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம் தெரிவித்தபொழுது திஸ்ஸ இந்த முடிவிற்கு சம்மதிக்கவில்லை. அப்படிச் செய்வது சிங்கள இனப் பெருமைக்கு இழுக்கு எனக் கூறி மறுத்துவிட்டார்.

இக்கருத்து ஜே.ஆரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கொழும்பில் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் 13 இடங்களுக்கும் 13 சடலங்களை அனுப்பும்போது இனக்கலவரம் ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு எனவும் எனவே ஒரே நேரத்தில் 13 சடலங்களையும் கொழும்புக்கு எடுத்துவந்து கனத்தை மயானத்தில் சகல இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு அவ்வாறே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.


ஜே.ஆரின் இந்த முடிவு யாழ்ப்பாணத்திலிருந்த திஸ்ஸ வீரதுங்கவிற்கு ஆட்டிகல சேபாலவால் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு பிற்பகல் 2 மணிக்குள் சடலங்களை கனத்தை மயானத்திற்குக் கொண்டு வருவதெனவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கூடியிருக்க பொழுது சாய்வதற்கு முன்னர் அடக்கம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


13 இறந்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் ஞாயிறு நண்பகலுக்குள் கனத்தை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத் தவிர, கொலையுண்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களும் ஏராளமாய்த் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தோடு கூட்டமாக சமூக விரோதச் சக்திகளும் கலந்துவிட்டன.



பொழுது சாய்ந்ததும் பகலவன் மறைந்த பின்னரும் சடலங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கனத்தைக்கு வந்து சேரவில்லை. காரணம் சிதைந்திருந்த சடலங்களை பலாலியில் பதப்படுத்தும் வசதியில்லை. சிதைந்து சின்னாபின்னமான உடலுறுப்புகளை இனங்கண்டு பொலித்தீன் பைகளில் அடைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன.


அதேசமயம், கனத்தை மயானத்தில் பதற்றம் ஏற்பட்டதால் சடலங்கள் கனத்தைக்குக் கொண்டுவரப்படமாட்டா, தயவுசெய்து அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என இராணுவம் தொடர்ச்சியாக இடைவிடாமல் அறிவித்துக் கொண்டிருந்தது. எனினும், சனக்கூட்டம் கலைந்தபாடில்லை.


இதற்கிடையில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஒரே இரவில் எங்கே சடலங்கள், எங்கே புதைத்தார்கள் ? என்பது அறியாமலே தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, கடைகள் கொளுத்தப்பட்டன, தமிழ் மக்கள் வயது வித்தியாசமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கொழும்பில் பரவிய கலவரம் எங்கும் பரவத் தொடங்கியது.


தவிர, காலி முகத்திடலில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழியில் எங்கும் சவப்பெட்டிகளைத் திறந்து பார்க்கக்கூடாது என்ற உத்தரவுடன் 13 இராணுவ வீரர்களின் சடலங்களும் திங்கட்கிழமை காலை அதாவது ஜூலை 24 ஆம் திகதி காலை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


அவ்வாறிருக்க ஞாயிறு இரவே இனக்கலவரம் நாடு பூராவும் பரவியது.  தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை, திருட்டுகளை, சூறையாடல்களைக் கட்டவிழ்த்து விட்டது யார்? ஆயிரக்கணக்கான தமிழரை நிர்க்கதியாக்கிய திரை மறைவுச் சக்தி எது?


சர்வசக்தி படைத்த அன்றைய ஜனாதிபதியால் இவற்றை நிறுத்த முடியாமல் போனது ஏன்? விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி சந்தி ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச் சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.


எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.


இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாக தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.



நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக, சிறைச்சாலை படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.


பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.


இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் உண்மை இன்றளவும் இருக்கின்றன.


அரசாங்கக் கட்டிடங்கள் , ஆலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். மனிதாபிமானமுள்ள சில சிங்கள, முஸ்லிம் மக்கள் அச் சமயங்களில் தமிழ் மக்களுக்கு  புகலிடம் அளித்திருந்தனர். 1983 ஜூலை 24 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்திய போதும் அதனை அமுல்படுத்த பொலிஸ் தரப்பு விருப்பற்று இருந்தது. இந்தக் கலவரம் இடம்பெறுவதற்கு முன்பாகவே இனங்கள் மத்தியிலான பதற்றம் அதிகரித்திருந்தது.  இனக் கலவரத்தையடுத்து பெருந்தொகையான தமிழ் மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கும்  கனடா, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.


தலைநகர் கொழும்பில் மாத்திரம் 20 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றை விட தென்னிலங்கை நகரங்களில்  வசித்த தமிழர்கள்  மீதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றன.  இக்கலவரத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 300 என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தபோதிலும் பல்வேறு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச முகவரமைப்புகள் 3000 பேர் வரை பலியாகியிருக்கலாமென தெரிவித்திருந்தன. 


சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றியும் அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றியும் ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றியும் அந்த நாட்டின் ஜனாதிபதி கவலைப்படவில்லை. ஆனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும் அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள். 1983 இல் நடந்தது வெறும் கலவரம் அன்று.


அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கம். ஒருவார காலத்துக்கும் மேலாக நீடித்த கலவரம்  சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. 

இனக் கலவரத்தினால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க ஏனையோர் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமான வட, கிழக்கையே நாடிச் சென்றனர். நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்  மக்கள்மீது  கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாகவே இந்த 1983 ஜூலை கலவரம் கருதப்படுகிறது. "கறுப்பு ஜூலை' வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியது.


இலட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றதைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இந்தியா தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறும் ஏற்பட்டது. மறுபுறம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. 

பண்பட்ட மனிதாபிமானமிக்க சிங்களவர், தமிழர்களை காப்பாற்றியிருக்கின்ற சம்பவங்கள் நிறையவே உண்டு.  1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தின் மகனை  காப்பாற்றி விமான நிலையம் சென்று இந்தியாவிற்கு அனுப்பிவைத்தவரே ஒரு சிங்களத்தலைவர்தான். 



ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான 

சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது.இக்கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள் .


 1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலைநிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது. 


இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது. 


மகாகவி கண்ட கனவு 


ஆனால் 1983 ஜூலை கலவரம் தமிழ் மக்கள் மத்தியில் முதலில் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வினை கருத்திற் கொண்டு மேற்கு உலகிற்கு  செல்லவேண்டிய  புலம்பெயர்வு எண்ணத்தை வலுவாக  ஏற்படுத்தியதால் இன்று அதை மகாகவி கண்ட கனவு போல் பார்க்கின்றோம் . இந்த நிலையை அடைவதற்கும் அந்நாடுகளில் ஆரம்பத்தில் அவன் செய்த தியாகமும் சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியுமே காரணமாயிற்று என்பதை நாம் முன்நிறுத்திப் பார்க்கவேண்டும். 


சிங்கள மக்களின் சிந்தனையிலும்  இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  . 34 ஆண்டுகளுக்குப் பின்பும்  இதனை நினைவுகூரி ஒரு  நிகழ்வை  ஐக்கிய சோஷலிச கட்சித்  தலைவர் எமது அரசியல் நண்பர்  சிறிதுங்க ஜயசூரிய கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை  கேட்போர் கூடத்தில் 27 ஆம் திகதி வியாழன் 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில்    ஏற்பாடு செய்திருக்கின்றார்.

No comments:

Post a Comment